சாதி மனிதர்களின் மனிதத்தன்மையைத் தரவரிசைப்படுத்தி, குறிப்பிட்ட சமூக மக்களைத் தீண்டாமைக்கு உட்படுத்தும் ஆதிக்க அமைப்பு. இந்த ஆதிக்க அமைப்பை சமூக மனதில் நிலைப்படுத்தி, உயிர்ப்புடன் வைத்திருக்க, பல மனிதத்தன்மையற்ற நம்பிக்கைகள் செயல்பாட்டில் இருத்தப்பட வேண்டும், அவற்றுள் ஒன்று அகமணமுறையும், அது மனித உடல்கள் மற்றும் மனங்கள் மீது செலுத்தும் அதிகாரமும்.
தலித் பெண்ணியம் சாதி கட்டமைத்திருக்கும் பாலின அரசியலைப் புரிந்துகொள்வதற்கான பார்வையை வழங்குகிறது. தலித் பெண்ணிய செயற்பாட்டாளர்-எழுத்தாளர் தேன்மொழி சௌந்தரராஜன் தனது புத்தகத்தில் சாதி கட்டமைத்திருக்கும் பாலின அரசியல் எவ்வாறு பெண்கள், பால்புதுமையினர் மற்றும் திருநர் உடல்களை வன்முறையின் வழி கட்டுப்படுத்துகிறது என்பதைக் குறிப்பிடுகிறார் – “ஒரு குடும்பத்தின் சாதி கௌரவம் அந்த குடும்பத்தின் சிஸ்-பெண்களின் ‘தூய்மையை’ வைத்து வரையறுக்கப்படுகிறது, எனவே அகமணமுறை பெண்கள், பால்புதுமையினர் மற்றும் திருநர் உடல்களைக் கட்டுப்படுத்தும் கருவியாகிறது. ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ‘தூய்மையான’ வாரிசை ஈட்டித் தர முடிவதால் எதிர்பாலீர்ப்பு வழமையைப் பிரதிபலிக்கும் உறவுகள் மட்டுமே கொண்டாடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.”
சாதி குறிப்பிட்ட சிலரிடம் வளங்கள் குவிந்திருக்கப்பட வேண்டி நிர்மாணிக்கப்பட்டு, அமைப்பாக்கப்பட்ட பொய். ஒரு திருநர் நபருடைய பாலின முரண்பாடு அவரது சுயத்தின் உண்மை. திருநர் மக்களின் பாலின அடையாளமும், அதைத் தேர்ந்துகொள்ள, தன்னுடலுக்கான விடுதலையை அடைய அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களும் பொய்களாலும் ஆதிக்கங்களாலும் கட்டமைக்கப்பட்டிருக்கும் சிக்கலான சாதி சங்கிலிகளின் இணைப்புகளைத் துண்டித்தாலும், அதைத் தொடரவும், அதன்வழி சமூக விடுதலைக்கு வழிகாட்டவும் திருநர் சமூகத்தால் இயலுமா அல்லது இங்கும் சாதி தன்னை மறுநிர்மாணம் செய்துகொள்ள சமூகம் அடிகோலுமா என்ற கேள்வியை நேர்மையுடன் கேட்டுக்கொள்வது அத்தியாவசியம் ஆகிறது.
சாதியால் ஒடுக்கப்படும் திருநர் நபர்கள் எதிர்கொள்ளும் கூட்டு ஒடுக்குமுறை
விமலா தலித் சமூகத்தில் பிறந்த திருநங்கை, கானா பாடகர். அம்பேத்கர் பாடலைப் பாடும் நாட்டின் வெகு சில பாடகர்களுள் இவரது குரலும் ஒன்று. வருடம்தோறும் தவறாது தலித் வரலாற்று மாதத்தில் அம்பேத்கர் பாடல் வெளியிடுவது தனது வாழ்க்கைப்பணி எனக் கூறுகிறார்.
விமலா, சாதி ஒடுக்குமுறையை பதின்பருவப் பிள்ளையாக பள்ளியில் எதிர்கொள்ளத் தொடங்கியிருந்தபோதும்,திருநங்கையாக வேண்டும் என்ற தேடல் மட்டுமே ஒரே தவிப்பாக மனதில் இருந்தது என்று கூறுகிறார். “நான் திருநர் என்று உணரும்போது எனக்கு 12, 13 வயதிருக்கும். அப்பொழுது நான் தலித், பட்டியிலடப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று தெரியும், ஆனால் இதனால் இத்தனை விஷயங்களை இழக்க நேரும் என்று எனக்கு அப்பொழுது தெரியவில்லை. மதிய உணவிற்கு மாட்டுக்கறி எடுத்துப் போகும்போது சக மாணவர்கள் என்னை விலக்கியதுண்டு. அந்த மனவலியை நான் இப்பொழுது பாடல்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கும் முன்பே நான் ட்ரான்ஸ்ஜென்டர் என்று எனக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டதால் சக மாணவர்களிடம் எனக்கு நிறைய பயம் உண்டு, அவர்களிடமிருந்து நான் விலகியே இருந்தேன்”
பால், பாலின அடையாளம் மற்றும் உடல் குறைபாடு முதலிய அடையாளங்களுடன் இணைந்த சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையை ஆய்வுக்குட்படுத்தியிருக்கும் சட்டம் மற்றும் கொள்கை ஆய்விற்கான அமைப்பு (CLPR) தனது ஆய்வறிக்கையில், திருநர் அடையாளத்தை முன்னிட்டு, அத்துமீறல்கள், வன்முறை மற்றும் பிறப்பில் சுட்டப்படும் பாலின அடையாள உடல்மொழியை ஏற்கச் சொல்லி தண்டனைகள் தரப்படுவது, திருநர் பிள்ளைகள் பள்ளிகளில் எதிர்கொள்ளும் வழக்கமாக இருப்பதைக் குறிப்பிடுகிறது. எனினும் கல்வி நிலையங்களில், சாதி மாணவர்களை ஒடுக்கும் முக்கிய காரணியாக இருப்பதையும், பாலினம், பாலின அடையாளம் மற்றும் உடல் குறைபாடு ஆகியவற்றின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகள் சாதீய ஒடுக்குமுறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும்போது, பள்ளிகளில் இருந்து நிற்பது அல்லது தரமான கல்வி கிடைப்பதற்கான சூழல்கள் பாதிக்கப்படுவது முதலான அதீத விளைவுகள் உருவாவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆய்வில் பங்கெடுத்திருக்கும் ராஷ்மி எனும் தலித் திருநர் நபர், பள்ளியில் சக மாணவர்களும் ஆசிரியர்களும் அவரது பாலின அடையாளத்தைக் கண்டுகொண்ட உடன், அவரைப் பள்ளியில் இருந்து நிற்க வைக்கத் தீவிரமாக முயன்றதையும், அதே பள்ளியில் படிப்பைத் தொடர கடுமையான நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறார். அம்பிகா என்னும் தலித் திருநர் நபருக்கு பல பள்ளிகளில் அவரது பாலின அடையாளத்தை சுட்டிக் காட்டி பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
பின்தொடரும் சாதி
பாலின உறுதிப்பாட்டு நடைமுறைகளின் பின் திருநங்கையாக வாழத் தொடங்கவும், சாதித்துக் காட்டவும் விமலா முயன்றபோது, அதுநாள் வரை வாழ்விற்கான போராட்டங்களில் ஒரு காரணியாக அவர் யோசித்துப் பார்த்திராத சாதி அமைப்பை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சாதி அமைப்பையும் அதன் ஒடுக்குமுறைகளையும் புரிந்துகொள்ள அம்பேத்கரின் புத்தகங்களை அவர் நாடியது, தலித் திருநங்கையாக தனது அடையாளத்தைப் புரிந்துகொள்ளவும், கானா பாடகராக தனது கலையை வளர்த்தெடுக்கவும் அவரைத் தூண்டியிருக்கிறது.
13 வயது முதலே அவருக்குத் திருநங்கைகளுடன் இருந்த நட்புறவும் திருநங்கையாக வாழத் தொடங்கவேண்டும் என்ற ஆசையும், அவரது வீட்டைவிட்டு 16 வயதில் திருநங்கைப் பெரியவர்களின் வீட்டிற்கு அவரைச் செல்லவைத்திருக்கிறது. 17 வயதில் திரும்பிவந்த பிறகான வாழ்வு சாதியைக் குறித்து அவரை சிந்திக்கவும், தேடி வாசிக்கவும் வைத்திருக்கிறது. “திருநங்கை தோழிகளுடன் சேர்ந்து எனக்கும் சாமி குறி பார்ப்பது, சுத்திப் போடுவது முதலான வேலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. சுத்திப்போட என்னை அழைக்கும் விசேஷ வீடுகளில், விசேஷம் நடக்கும்போது எனது சாதியைக் காரணம் காட்டி தனியான இடம்தான் தரப்படும், கோவில்களில் வழிபாடு நடக்கும்போது எனது சாதியைக் காரணம் காட்டி நான் வெளியேதான் நிறுத்தப்பட்டேன். அதன் பிறகு சாதி அடக்குமுறையைப் பற்றி தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினேன். அப்பொழுது நான் கையில் எடுத்த மிகப் பெரிய ஆயுதம்தான், டாக்டர் அம்பேத்கர். அவரைக் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய ஆர்வத்தை எனக்குள்ளே நிறைய வளர்த்துக் கொண்டேன். அவரது புத்தகங்கள், அவரைப் பற்றிய குறும்படங்கள், அவரது வாழ்க்கை வரலாறு, உரைகள் என தேடித் தேடி கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.”
சிஎல்பிஆர்-இன் அதே ஆய்வில் பங்கெடுத்த, சிவசக்தியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தலித் திருநர் நபர் சூர்யா, திருவிழாவில் மத, கலாசார சேவைகளைத் தர தான் அழைக்கப்பட்டாலும், தன்னுடன் இருந்த உயர்சாதிகளைச் சேர்ந்த திருநர் நபர்கள் மட்டுமே கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதையும், தனது சாதி அடையாளத்தைக் காரணம் காட்டி கோவிலுக்குள் நுழைய தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறார். சமூகத் தொடர்புகளிலும் உறவுகளிலும் சாதி மற்றும் பாலின அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள், இரண்டின் அடிப்படையிலும் கடுமையான கூட்டு ஒடுக்குமுறைகளை எதிர்கொள்வதை அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
சாதியின் இருப்பு உடல், மனவெளிகளிலும் இருக்கிறது
இனியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிராமணக் குடும்பத்தில் பிறந்த திருநம்பி. அவரது குடும்பத்தில் திருநம்பியாக அவரை வெளிப்படுத்திகொள்வதற்கு பல ஆண்டுகள் எடுத்திருக்கிறது. வெளிப்படுத்திக்கொண்ட பிறகும், மருத்துவ பாலின உறுதிபாடு நடைமுறைகளை மேற்கொள்ள அவரது குடும்பம் சம்மதிக்கவில்லை. நீண்டகால மனஉளைச்சலின் பின், தற்போது அவரது குடும்பத்தின் விருப்பம் இன்றியே பாலின உறுதிபாடு நடைமுறைகளை அவர் தொடங்கியிருக்கிறார். அவரது தோற்றத்தில் உருவாகத் தொடங்கியிருக்கும் மாற்றங்கள், அவரது குடும்பத்தினருக்கு புதுவகையான மனப்பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அது தன்னை தனது குடும்பத்தின் சாதி அடையாளத்தைக் குறித்து சிந்திக்க வைப்பதாகவும் அவர் கூறுகிறார்.
“என்னைக் குடும்ப நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வது குறித்து யோசிக்கிறார்கள், எப்பொழுது நான் பார்ப்பதற்கு முழு ஆணைப் போல இருப்பேன் எனக் கேட்கிறார்கள்” இனியன் அவரது திருநர் அடையாளத்தை ஏற்றுக்கொண்டதும், அது தற்போது அவரது உடலில் பிரதிபலிப்பதும் சாதி அமைப்பினுள் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தையும் அதன்வழி அவரது குடும்பத்தினரின் சாதி சலுகைகளையும் அசைத்துப் பார்ப்பதாக அவர் கூறுகிறார். அது தரும் மனப்பதற்றத்தைத்தான் அவரது குடும்பத்தினர் வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்துவதாக அவர் கூறுகிறார்.
“அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. ‘ஒன்று ஒரு பெண்ணாக உனது சாதி அடையாளத்தைக் காட்டிக்கொண்டு வாழு அல்லது ஒரு முழு ஆணாக உனது சாதி அடையாளத்தைக் காட்டிக்கொண்டு வாழு, இப்படி இருக்காதே, என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை’ என்பதைத்தான் அவர்கள் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்”. வீட்டில் தொடர்ச்சியாக நிகழும் இந்த சம்பவங்கள் தன்னைத் தொடர் மனவேதனைக்கும் தனிமைக்கும் உட்படுத்துவதாக அவர் கூறுகிறார். ஆனால் இந்த தனிமை உணர்வு தனது சாதி அடையாளத்தை இறுக்கமாகப் பற்றிக்கொள்வதற்கு வித்திடக் கூடாது என்பதில் தான் கவனமாய் இருப்பதாக அவர் கூறுகிறார்.
“என்னைச் சுற்றியிருந்த ஆண்கள் மேலாதிக்கத்துடன் நடந்துகொள்வதை உள்வாங்கித்தான் நான் வளர்ந்திருக்கிறேன். கல்லூரி நாட்களில் நான் திருநம்பி என்று உணர்ந்துகொள்ள முடியாதபோது, எனது ஈர்ப்பும் பெண்கள் மீது இருந்தபோது, எனது குடும்பத்து ஆண்களைப் போல அதிகாரத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று நான் நம்பியதுண்டு. ஆனால் அது பெண்கள் மீது மட்டுமான அதிகாரம் என்றில்லாது எல்லா சமூக மக்கள் மீதும் செலுத்தப்படும் அதிகாரமாக இருக்கிறது என்பதையும் நான் கவனித்து வந்திருக்கிறேன். ஆகையால்தான், நான் வளரும்போது உள்வாங்கியிருந்த, எந்த நம்பிக்கைகள், பழக்கங்கள் எல்லாம் அந்த மேலாதிக்கத்தை எனக்குள் ஊன்றியிருக்கின்றனவோ அவற்றை எனது மனதில் இருந்து நீக்கவும், நான் நானாக வாழவும் ஆசைப்படுகிறேன்.”
இனியன் போன்ற சவர்ண திருநர் நபர்கள் சாதி சார்ந்து தன்னுடைய திருநர் அடையாளத்தைப் பிரதிபலிக்கவோ, இந்த விளிம்புநிலை அடையாளம் சாதி சலுகைகளுடன் இணைந்து தன்னைப் பிற சாதியால் ஒடுக்கப்படும் திருநர் நபர்களிடமிருந்து எவ்வாறு பிரிக்கிறது என்றோ அல்லது சாதி போன்ற ஒரு ஆதிக்க அமைப்பைக் கேள்விக்கு உட்படுத்தாவண்ணம் திருநர் அடையாளங்கள் எவ்வாறு சமூக உரையாடல்களில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன என்றோ சிந்திக்க, குயர்/திருநர் அமைப்புகளில், மனநல பாதுகாப்பு அமைப்புகளில் எந்த இடமும் இல்லை. சாதி சார்ந்து அழுத்தமான மௌனம் இவ்வமைப்புகளில் பரவிக் கிடக்கிறது. மேலும், சாதி தாக்கங்களை ஏற்படுத்தாத வெட்டவெளியில் ஒரு திருநர் நபருடைய பாலின அடையாளம் இருப்பதாக சொல்லப்படும் பொய்யும் தொடர்ச்சியாகக் கூறப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இந்த கட்டமைப்பு, சாதி குறித்து பேசாமல் தனது திருநர் அடையாளத்தைக் குறித்துப் பேச, அது எவ்வளவு குறுகிய பார்வையாக இருந்தாலும், சவர்ண திருநர் நபர்களுக்கு பாதுகாப்பு வெளிகளைத் தரும்போது, தலித் மற்றும் சாதியால் ஒடுக்கப்படும் பிற திருநர் நபர்களுக்கு பாதுகாப்பு வெளிகளை மறுக்கிறது.
பாலின ஈர்மைக்கு அப்பாற்பட்ட தலித் நபராக மருத்துவ மற்றும் மனநல அமைப்புகளை நாடுவது குறித்து பேசும் கட்டுரையில் ரேச்செல் பாரதி சந்திரன் இவ்வாறு எழுதுகிறார் – “பாலின ஈர்மைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களைக் கொண்டுள்ள நபர்களின் கதைகளைக் கேட்பது அவசியமாக இருக்கிறது. ஏனெனில், எங்களது அடையாளங்கள் எங்களது மனவெளிகளில் மையம் கொண்டுள்ளன, சிலருக்கு, அவர்களது உடல்களில். ஆனால், சாதி என்ற வார்த்தையைக் குறிப்பிடத் தவறும் உளவியலாளருடன் ஒரு தலித் நபராக நான் எவ்வாறு சாதி குறித்து பேச முடியும்?பாலின ஈர்மைக்கு அப்பாற்பட்ட எனது பாலின அடையாளம், பள்ளி மற்றும் பணியிடங்களில் நான் எதிர்கொண்டவை என அனைத்தும் எனது தலித் அடையாளத்தால் குறிக்கப்பட்டிருக்கும்போது, நான் எவ்வாறு இவற்றைக் குறித்து வெளிப்படையாகப் பேச முடியும்? சாதி குறித்து உரையாடாமல் பால், பாலினம், மதம், உடல்/மனக் குறைபாடு ஆகியவற்றின் அடிப்படையில் விளிம்புநிலை அடையாளங்களைக் கொண்டுள்ள எங்களைக் குறித்துப் பேசவே முடியாது.”
தலித் சமூகங்களின் திருநர் வெறுப்பு அவர்கள் எதிர்கொள்ளும் சாதீய வன்முறைகளால் உருவாக்கப்படுகிறது
திருநராக வாழத் தொடங்க, தற்காலிகமாவது வீட்டை விட்டு நகர வேண்டிய தேவை தலித் திருநர் நபர்களுக்கும் ஏற்படுகிறது. விமலா தன்னுடைய 16-வது வயதில் திருநங்கையாக வாழத் தொடங்க தனது வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். லிவிங் ஸ்மைல் வித்யா தலித் சமூகத்தில் பிறந்த திருநங்கை-எழுத்தாளர் மற்றும் நாடகக் கலைஞர். அவரது சுயசரிதையில் கல்விக்கு அவர் தந்தை கொடுத்த அதீத முக்கியத்துவத்தையும், பாலின முரண்பாடு தரும் மன உளைச்சலில் மதிப்பெண்கள் குறைந்துவிடாமல் இருக்க அவர் பாடுபட்டதையும், அவரது இருபதுகளில் கல்வியையா, மதிப்பு வாய்ந்த உத்தியோகத்தையா அல்லது தனது பாலின அடையாளத்தையா, எதைத் தேர்ந்தெடுப்பது என்று தவித்ததையும் ஆவணப்படுத்துகிறார்.
“நாடகத் துறையில் முனைவர் பட்டம் படிப்பதும், தொடர்ந்து நாடகச் செயல்பாடுகளில் தீவிரமாக இருப்பதும்தான் முதுகலை படிக்கும்வரை என் எதிர்காலத் திட்டமாக இருந்தது. ஆனால், நாளுக்கு நாள் என் பெண்மையின் உக்கிரம் வலுவடைந்துகொண்டே இருந்தது. எனக்குள் என்னவென்றே புரியாமல் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் நான் நிலைகுலைந்து நின்றேன். நான் என்னவாக ஆக வேண்டும்? இந்தக் கேள்வி பெரியது. நான் ஒரு நாடகக் கலைஞர் ஆவது என்பது ஒன்று. என் தந்தை ஆறுதல் கொள்ளத்தக்க வகையில் ஓர் உத்தியோகத்தைத் தேடிக் கொள்வதென்பது இன்னொன்று. எல்லாவற்றையும் மீறி நான் பிறந்ததிலிருந்து போட்டு வந்த இந்த ‘ஆண் வேடத்தை’க் கலைத்து விட்டு எப்போது என் இயல்பான பெண்ணுருவில் வலம் வருவது என்பது மூன்றாவது. இதில் எனக்கு அதிகக் குழப்பத்தைத் தந்தது என் தந்தை குறித்த கவலைகள். என் படிப்புக்காக அதிக வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தார் அவர். நான் ஒரு பெண் என்று அவரிடம் எப்படி என்னால் தெரிவிக்க முடியும்?”
தலித் குடும்பங்கள் தங்களது திருநர் பிள்ளைகளிடம் காட்டும் வன்முறையின் தோற்றம் அவர்களது குடும்பங்கள், சமூகங்கள் தலைமுறைகளாக எதிர்கொண்ட, எதிர்கொண்டு வரும் சாதீய வன்முறைகளில் இருந்து எழுகிறது. தனது மனிதத்தன்மையை சாதி அமைப்பிடம் நிரூபிக்க வேண்டிய தேவை இருப்பதாக நம்பவைக்கப்பட்டிருக்கும் சமூகங்கள் சிஸ்-எதிர்பாலீர்ப்பு வழமைகளை அச்ச உணர்வுடன் இறுக்கப் பற்றிக்கொள்கின்றன. அது, சாதியால் ஒடுக்கப்படும் சமூகங்களைத் தங்களது திருநர் மற்றும் பால்புது பிள்ளைகளிடம், சுயமரியாதையா அல்லது திருநர்/பால்புது அடையாளமா, ஏதாவது ஒன்றைத் தேர்வு செய் என்ற சாத்தியமற்ற கேள்வியை முன்வைக்க சொல்கிறது. ஸ்மைலியின் சுயசரிதையின் முதல் பகுதி, கல்வி/மதிப்பு வாய்ந்த உத்தியோகம் அல்லது திருநங்கை அடையாளம் ஆகிய இரண்டினுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அவர் தள்ளப்படுவதையும் இரண்டாவது பகுதி திருநங்கையாக அவரது சுயமரியாதையை நிறுவ அவர் மேற்கொள்ளும் போராட்டங்களையும் ஆவணப்படுத்துகிறது.
பாலின ஈர்மைக்கு அப்பாற்பட்ட அடையாளத்தைக் கொண்டுள்ள கருப்பின உளவியல் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ப்ரெண்டிஸ் ஹெம்பில், தனது குயர் அடையாளத்தை முன்னிட்டு வீட்டை விட்டுத் தற்காலிகமாக நகரத் தனக்கு ஏற்பட்ட தேவை, நிறத்தின் அடிப்படையிலான ஆதிக்க அமைப்பு தனது குடும்பத்தைத் தலைமுறைகளாக உடைத்திருந்ததன் மூலம் உருவானது என எழுதுகிறார் – “தன்னைக் குறித்து, தங்களது சமூகங்களைக் குறித்து ஆதிக்க அமைப்பு கட்டமைத்திருக்கும் பார்வையை உள்வாங்குவதின் மூலம் ஒடுக்குமுறை உள்ளார்ந்த ஒடுக்குமுறையாக உருமாறுகிறது. எனது குடும்பம் என்னை ஏற்றுக்கொள்ள மறுத்ததில், நிற ஆதிக்க அமைப்பு கட்டமைத்திருக்கும் சமூகத்தில் உயிருடன் வாழ்வதற்கென, எனது குடும்பம் எங்களைக் குறித்து எந்த விஷயங்களை எல்லாம் மறைத்து வைக்க வேண்டும் என்றோ, சமரசம் செய்யவேண்டும் என்றோ நம்பியிருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்.”
தலித் பெண்ணிய செயற்பாட்டாளர்-எழுத்தாளர் தேன்மொழி சௌந்தரராஜன் தலித் சமூகங்களுள் நிகழ்த்தப்படும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை அவற்றின் வேர்களில் இருந்து புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தைக் குறித்து தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார் – “சாதி அடிப்படையிலான பாலியல் வன்முறை நமது மனங்களை எப்படி மாற்றியமைத்திருக்கிறது, நூற்றாண்டுகளாக அது எப்படி நம்மை நடுங்க வைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள ஒருவரும் உண்மையில் தயாராக இல்லை. தலித் சமூகத்தினுள் காணப்படும் பாலினத்தின் அடிப்படையிலான எந்த ஒரு வன்முறையும், சாதி அமைப்பினால் நமது உடல்களும் நமது குடும்பங்களும் முன்னோர்களும் எதிர்கொண்ட வன்முறைகளின் நேரடி விளைவாகும்.”
சாதியினால் ஒடுக்கப்படும் சமூகங்கள் இந்த காயங்களில் இருந்து மீண்டெழ வேண்டிய சூழலைப் பொதுச்சமூகத்தில் உருவாக்க வேண்டிய தேவை இதன் மூலம் புலனாகிறது. “சாதி ஒழிப்பு பணியின் பொருளாதார-அரசியல் அங்கம், பெரும்பாலான நேரங்களில் நமது உடல்கள், மனங்கள், நமது உறவுகள் மற்றும் பாலியல் செயல்பாடுகளிலிருந்தும் சாதியை எவ்வாறு களைவது என்பதைக் கண்ணோக்குவதில்லை” என்பதையும் தேன்மொழி சௌந்தரராஜன் குறிப்பிடுகிறார். சாதியால் ஒடுக்கப்படும் திருநர் மற்றும் பால்புது நபர்கள், பாலின ஈர்மைக்கு அப்பாற்பட்ட நபர்கள் மற்றும் பெண்களின் போராட்டங்களை மையப்படுத்தி சமூக அமைப்புகள் பணியாற்ற வேண்டியதின் தேவையை இது சுட்டிக்காட்டுகிறது.
குடும்பங்களின் திருநர் வெறுப்பு அவர்களின் சாதி அடையாளத்தால் கட்டமைக்கப்படுகிறது
இந்தியக் குடும்பங்கள் சாதியற்ற, அனைவரின் மனிதத்தன்மையையும் மதிக்கும் அன்புவெளி அல்ல. குடும்ப அமைப்புகள் சாதியால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் பிற சமூகத்து மக்கள் இணையாத, தனிமைப்படுத்தப்பட்ட, தனது சாதி சலுகைகள் நிர்ணயிக்கும் நிலம், மதம், அறிவு, தொழில் சார்ந்த வெவ்வேறு வகையான அதிகார மையங்களாக இயங்கி வரும் கட்டமைப்புகள்.
ஏதேனும் குடும்ப நிகழ்வுகளுக்கான தேதி நெருங்குகையில், வீடு வழக்கத்தைக் காட்டிலும் அதிக மன அழுத்தம் தரக்கூடிய இடமாக மாறுவதாக இனியன் குறிப்பிடுகிறார். “சிறு வயதிலிருந்து என்னுடைய வீட்டில் வர்ணாசிரமத்தைக் குறிப்பிட்டே வெளிப்படையான பேச்சு உண்டு. ‘நீங்க பிராமின்-ல? அப்போ நீங்க எப்போவும் மேல இருக்கணும், டாப் காலேஜ்-ல படிக்கணும், இந்த வேலைய தான் பாக்கணும்’ போன்ற பேச்சுக்கள்தான் குடும்ப விசாரிப்புகளில் நடக்கும். சிறு வயதில் உறவினர்கள் கூடும்போது, திருநர் பிள்ளையாக என்னுடைய பாலின வெளிப்பாடு பெண் குழந்தைகளைப் போல இல்லாதிருந்தது, பேசுபொருள் ஆவதும் என்னைக் குறைத்து மதிப்பிட்டு நடத்துவதும் வழக்கமாக இருந்தது. இப்பொழுது உறவினர்களை எனது குடும்பம் சந்திக்க வேண்டியிருந்தால், அதற்கு சில நாட்கள் முன்பிருந்தே, எனது உடல் மாற்றங்கள் குறித்து காயப்படுத்தும்வண்ணம் பேசுவது வழக்கமாக இருக்கிறது.” இந்த வன்முறைகள் உணர்வுரீதியில் மட்டுமே வெளிப்படுத்தப்படுவதாகவும், சாதியின் உயர் மட்டங்கள் எழுப்பும் இது போன்ற தொடர் மனக்காயங்களை எப்படி அணுகுவது என்று புரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சமீப காலங்களில், பால்புதுமையினர் மற்றும் திருநர் நபர்களுக்கான பாதுகாப்பு வெளிகளை மனநல அமைப்புகளில் உருவாக்கும் முயற்சிகள் பரவலாக நடந்து வருகின்றன. சாதி உருவாக்கும் மன அழுத்தத்தைக் குறித்துப் பேச சாதியால் ஒடுக்கப்படும் நபர்களுக்கு பாதுகாப்பு வெளிகளை உருவாக்க வேண்டிய தேவையைக் குறித்து சாதி எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், சாதி அடையாளம் திருநர் மற்றும் பால்புது வெறுப்பை எவ்வாறு தூண்டுகிறது என்பது புரிந்துகொள்ளப்படாமல் இருப்பது, தொடர் இழப்புகளை சமூக அமைப்புகளுள் ஏற்படுத்துகிறது. மேலும், இந்த புரிதலின்மை சாதியால் ஒடுக்கப்படும் திருநர் நபர்களை அமைப்பு ரீதியில் கட்டமைக்கப்படும் தனிமைக்குள்ளும் தள்ளுகிறது.
தனது சாதி அடையாளம் மற்றும் அது எந்த அமைப்புகளுளெல்லாம் நுழைய தனக்கு அனுமதி தந்திருக்கிறதோ, அவற்றை சார்ந்து, தான் எதிர்கொண்ட திருநர் வெறுப்பு வன்முறையை ஒரு சவர்ண திருநர் நபர் வெளிப்படையாகப் பேச வெளிகள் இல்லாதிருக்கும்போது, தான் எதிர்கொள்பவற்றின் முழு உண்மையைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை அவர் இழக்கிறார், தான் சார்ந்த சமூகத்தின் ஒடுக்குமுறை அமைப்பைக் களைய தனது குறிப்பிட்ட வாழ்பனுபவம் என்ன பங்கைத் தந்திருக்க முடியும் என்பதை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பையும் இழக்கிறார். இதனால் திருநர் நபராக தன்னால் பெற முடிந்த சாதி சலுகைகளுடன் சமூகத்தினுள் சாதி அதிகாரங்களை வெவ்வேறு வடிவங்களில் அவர் மறுஉற்பத்தி செய்வது நடக்கிறது.
ரேவதி, ‘வெள்ளை மொழி’ என்ற தனது சுயசரிதையில் அவரது திருநங்கை அடையாளத்தை முன்னிட்டு வீடு அவருக்கு வன்முறைக் களமாக இருந்ததை ஆவணப்படுத்துகிறார். அவர் சொந்தமாக நிலம் வைத்திருந்த, ஆதிக்க சாதி குடும்பத்தில் பிறந்த திருநங்கை. அவர் மீது கடுமையான வன்முறை எறியப்படுவதற்கு ‘தனது பெண்மையை வெளிப்படுத்துவதின் மூலம் குடும்ப மானத்தை அவர் அழிக்கிறார்’ என்ற சிந்தனைப்போக்கு காரணமாக இருந்ததை அவரது புத்தகம் பல்வேறு தருணங்களில் எடுத்துக்காட்டுகிறது. பாலின உறுதிப்பாட்டு நடைமுறைகளை மேற்கொண்டு அவர் திருநங்கையாக வாழத் தொடங்கிய பின், அதைத் தெரிந்துகொண்ட அவரது குடும்பத்தினர், திட்டமிட்டு அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லை எனப் பொய் சொல்லி அவரைக் கிராமத்திற்கு வரவழைத்ததையும், கடுமையாக அடித்து ஆணாக வாழக் கட்டாயப்படுத்தியதையும் எழுதியிருக்கிறார். “உனக்கு என்ன கொற வச்சோம்? நம்மகிட்ட வேலை செய்ய இத்தனை ஆட்கள் இருக்க நீ பொடவ கட்டிக்கிட்டு பிச்ச கேட்கின்ற நெலம எதுக்கு? நம்ம சாதி என்ன, நம்ம குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம்! இதெல்லாம் மறந்துட்டு இப்படிப் போறதுக்கு உனக்கு எப்படி மனசு வந்துச்சு”, அண்ணன்கள் அடித்ததனால் உருவான காயங்களுக்கு மருந்திடும்போது தனது அம்மாவின் வார்த்தைகள் இவ்வாறாக இருந்ததை அவர் ஆவணப்படுத்தியிருக்கிறார்.
1995-2004 காலகட்டங்களில் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட தலித் சமூகங்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை ஃப்ரண்ட்லைனில் ஆவணப்படுத்தியிருக்கும் பத்திரிகையாளர் எஸ்.விஸ்வநாதன், பிற்படுத்தப்பட்ட சாதிகளிடம் சேரத் துவங்கியிருந்த அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம், தலித் மக்கள் மீதான வன்முறை பன்மடங்கு அதிகரித்திருப்பதற்கான காரணமாக இருப்பதையும், அந்த வன்முறைகள் உடல்ரீதியிலான நேரடி வன்முறையாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
அதே அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரப் புள்ளியிலிருந்து திருநர் மற்றும் பால்புது வெறுப்பு செயல்படுத்தப்படுவதை மன்சூர் ரஹ்மான் v காவல் கண்காணிப்பாளர் வழக்கு சுட்டிக்காட்டுகிறது. இந்த வழக்கில் மெட்ராஸ் உயர் நீதிமன்றம், ‘அரசியல்’ செல்வாக்குள்ள தனது குடும்பத்தால் அச்சுறுத்தல்களையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்ட ஆணுக்கும், அவருடைய திருநர் இணையருக்கும் காவல்துறையின் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டது. இரு வேறு சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த இணையர்களுக்கு குடும்பங்கள் உருவாக்கும் பிரச்சனைகள் எவ்வாறு கையாளப்படுமோ, அவ்வாறே திருநர் நபர்களுடனான உறவுக்கு குடும்பங்கள் காட்டும் எதிர்ப்பும் சட்டப்படி கையாளப்படவேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டதை, குயர் மற்றும் திருநர் நபர்களின் உறவுகளில் இருக்கும் சட்டம் மட்டும் கொள்கை சிக்கல்களை ஆய்வுகுட்படுத்தியிருக்கும் சி-ஹெல்ப் (சுகாதார சமத்துவம், சட்டம் மற்றும் கொள்கை கொள்கைக்கான அமைப்பு)-இன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கௌரவக் குற்றங்களை பால்புது நபர்கள் மற்றும் திருநர் நபர்களும் எதிர்கொள்வதை பியுசிஎல் மற்றும் தன்பாலீர்ப்பு, இருபாலீர்ப்பு, இடைபால் பெண்கள் மற்றும் திருநர் நபர்களுக்கான தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த பொது விசாரணைக் கூட்டம் வெளிப்படுத்துகிறது. இந்த கூட்டம், திருமண சமத்துவ விவாதங்களில் குயர் மற்றும் திருநர் நபர்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைகளை மையப்படுத்துவதற்காக ஒருங்கிணைக்கப்பட்டது. எதிர்பாலீர்ப்பு அகமணமுறை பிறப்பின் அடிப்படையிலான குடும்பங்களிடமிருந்து வன்முறையைத் தூண்டுவதையும் இரு வேறு மதங்கள்/சாதிகளைச் சேர்ந்த குயர்/திருநர் இணையர்களின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள சாதி, சமூகம், பாலீர்ப்பு முதலிய அடையாளங்களைச் சார்ந்த ஆழமான பகுப்பாய்வு அவசியம் என்பதையும் இதன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறை அமைப்புகளைக் களைய ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு முயற்சிகள் தேவை
தலித் மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு 2022-இல் கௌரவக் குற்றங்களைத் தடுக்கும் தனிச்சட்டத்தை உருவாக்கும் முயற்சியாக 17 பக்க வரைவு மசோதாவை வடிவமைத்திருக்கிறது. பல சாதி எதிர்ப்பு செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் பங்கெடுத்திருக்கும் கூட்டமைப்பைத் தலைமை தாங்கி நடத்தியது எவிடன்ஸ் அமைப்பின் இயக்குனர் கதிர், வரைவு மசோதாவை உருவாக்கியது சட்டம் மற்றும் கொள்கைக்கான ஆய்வமைப்பு (சிஎல்பிஆர்). அகில இந்தியாவிற்கும் பொருந்தும் தனிச்சட்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மசோதாவை ‘திருமணம் மற்றும் உறவுகளுக்கான சுதந்திரம் மற்றும் ‘கௌரவத்தின்’ பெயரில் நடக்கும் குற்றத் தடுப்பு மசோதா 2022’ என அழைக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. “கௌரவம் என்ற பெயரில் சாதி, மதம், வயது, பாலின அடையாளம், பாலீர்ப்பு, மொழி, வகுப்பு, நிறம், பழங்குடி, ஆதிக்குடி பூர்வீக அடையாளம், கலாச்சாரம் போன்ற காரணிகளின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் குற்றங்களில் நீதி, இழப்பீடு, மறுவாழ்வு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக மசோதா உருவாக்கப்படுவதாக” இந்த மாதிரி மசோதா தெரிவிக்கிறது. மேலும், கௌரவத்தின் பெயரில் நடக்கும் குற்றங்களாக தனிமனித சுதந்திரம், மாண்பு மற்றும் தேர்வினை அடக்கும் 29 குற்றங்களை விளக்கமாகப் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியல் எவை கௌரவக் குற்றங்கள் என்பதற்கான வழிகாட்டும் பட்டியலே ஒழிய, இந்த 29 குற்றங்கள் மட்டுமே கௌரவக் குற்றங்கள் என்று நிர்ணயிக்கும் பட்டியல் அல்ல எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
நாடெங்கும் நடக்கும் கௌரவக் குற்றங்களை பாலினத்தின் பார்வையில் அலசி, கௌரவக் குற்றங்களுக்கான விளக்கத்தில் பாலின அடையாளம் மற்றும் பாலீர்ப்பு ஆகிய காரணிகளையும் உள்ளடக்கி, சாதி ஆதிக்கம் நிகழ்த்தும் பல்வேறு வகையான வன்முறை செயல்களைக் குற்றங்களாகப் பட்டியலிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வரைவு மசோதா பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சியினால் சாத்தியமானதாக எவிடன்ஸ் அமைப்பின் கதிர் கூறுகிறார். ஆனால், கௌரவத்தின் பெயரில் நடக்கும் வன்முறைகளை எதிர்கொள்ளும் பால்புது மற்றும் திருநர் நபர்கள் குறித்தான தரவுகள் இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார். “2017 முதல் 2021 வரை ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 3 ஆணவக் கொலைகள்தான் நடந்திருப்பதாக அரசுத் தரப்பு கூறுகிறது. இரு வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களின் திருமணங்களை எதிர்க்கும் கௌரவக் குற்றங்களுக்கான தரவுகளே இவ்வளவு குறைத்துக் காண்பிக்கப்படும்போது, மதம், பாலின அடையாளம் மற்றும் சிறுபான்மை இனத்தைக் காரணியாக வைத்து மேற்கொள்ளப்படும் கௌரவக் குற்றங்களுக்கான கணக்கெடுப்பு விடுபட்டுப் போகிறது” என்று கூறுகிறார்.
சாதியின் இருப்பை மறுப்பது போலியான சுதந்திர உணர்வுக்கு இட்டுச் செல்லும்
நால்சா தீர்ப்பைப் பகுப்பாய்வு செய்யும் கட்டுரையில் பேராசிரியர் சுமித் பவுத் இவ்வாறு எழுதுகிறார் – “நால்சா தீர்ப்பின் முதல் பத்தி இவ்வாறு தெரிவிக்கிறது – ‘சமூகம் பல நேரங்களில் திருநர் சமூக நபர்களைக் கிண்டலுக்கும் அத்துமீறலுக்கும் உட்படுத்துகிறது. பொது இடங்களான ரயில் நிலையங்கள், பணியிடங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகளில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள்’. இந்த ஒப்பீட்டின் அனுமானம் என்னவெனில், திருநர் நபர்களும் “தீண்டத்தகாதவர்களும்” இரண்டு வெவ்வேறு விளிம்புநிலை அடையாளங்களைக் கொண்ட மக்கள். வெவ்வேறு விளிம்பு நிலை அடையாளங்களைத் தனிப்பட்ட, ஒன்றிணையாத அடையாளங்களாகக் கருதும் இந்த அனுமானம், தலித் மற்றும் ஆதிவாசி திருநர் நபர்களின் வாழ்பனுபவங்களை இருட்டடிப்பு செய்கிறது.
இந்த வழக்கில் மற்றொரு விண்ணப்பதாரரின் வாதம், இதிகாசங்கள், இந்து புராணங்கள் மற்றும் வேத இலக்கியங்களில் திருநர் நபர்கள் குறிப்பிடப்படுவதை சாதகமான வரலாற்றுப் பின்னணியாக முன்னிறுத்தியது. இந்த நூல்கள் பிராமண மக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட அறிவு களஞ்சியமாகவும் சாதி மற்றும் பாலின சமத்துவமின்மையின் மூலங்களாகவும் கருதப்படுகின்றன. மேலும் இந்த விண்ணப்பதாரரின் வாதம் 1871-இன் குற்றப் பரம்பரை சட்டத்தைக் குறிப்பிட்டு, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் அடக்குமுறைகளைக் குறிப்பிடுகிறது. நால்சா இந்த வாதங்களை அங்கீகரித்து, விரிவாக்கியிருக்கிறது. இது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மையின் வரலாற்றுத் தீமைகளைப் புறக்கணித்து அமைதி காத்துவிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட காலானியாதிக்க கொடுமைகளை மட்டும் முன்னிறுத்தும் முயற்சியாகும்.”
சாதி அமைப்பின் இருப்பைப் புறக்கணித்துவிட்டு, பால்புது மற்றும் திருநர் உரிமைகளுக்காகப் போராடும் முயற்சி, அடிப்படையில் சாதீய முயற்சி ஆகிறது. இது போன்ற முயற்சிகள், எதிர்பாலீர்ப்பு அகமணமுறையால் எழுப்பப்பட்டிருக்கும் சாதி ஆதிக்க அமைப்பில் சவர்ண திருநர் மற்றும் பால்புது நபர்களை இணைப்பதுதான் பால்புது/திருநர் விடுதலை எனக் கருதுகின்றனவா என்று கேட்க வைக்கின்றன. குயர் அமைப்புகளுள் மையப்படுத்தப்பட்டிருக்கும் சாதி புறக்கணிப்பு சிந்தனை அமைப்புகள், சாதியால் ஒடுக்கப்படும் பால்புது மற்றும் திருநர் நபர்களுக்கு பாதுகாப்பு வெளியை மறுப்பதோடு, அவர்களுக்கு எதிரான சாதி அடிப்படையிலான புது வடிவ ஒடுக்குமுறைகளையும் வளர்த்தெடுக்கின்றன.
குயர் அமைப்புகளுள் நிலவும் சாதீயம் குறித்து ரேச்செல் பாரதி சந்திரன் இவ்வாறு எழுதுகிறார் – “சமூகத்தின் சிஸ்-எதிர்பாலீர்ப்பு மக்கள் சாதீயத்துடன் நடந்துகொள்வதை போலத்தான் உயர் சாதிகளால் நடத்தப்படும் இந்தியாவின் குயர் வெளிகளும் நடந்துகொள்கின்றன.”
வரலாற்று ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மக்களை சமூக அமைப்புகளுள் இணைப்பதைக் குறித்து எழுதும் சுதிப்தா தாஸ், “இணைப்பு உலகளாவிய மனித உரிமையாகும். வரலாற்று ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மக்களை இணைப்பதை அடிப்படை நடைமுறையாகக் கொள்ளாது, மனித உரிமை அமைப்புகள் நடத்தப்பட முடியாது. இணைப்பு என்பது சமமான பகிர்வு, சமமான வாய்ப்புகளை வளர்த்தெடுப்பதாகும், பாகுபாடுகள் மற்றும் சகிப்புத்தன்மையின்மையை ஒழித்துக் கட்டுவதாகும், அதிகாரம் மற்றும் இடங்களைப் பகிர்வதாகும். உரிமைகள் சார்ந்து பணிபுரியும் அரசு சாரா நிறுவனங்கள், இணைப்பை அதன் அத்தனை நுணுக்கங்கள் மற்றும் சிக்கல்களுடன் உறுதி செய்ய வேண்டும்” என்று எழுதுகிறார்.
விளிம்பு நிலை அடையாள சமூகங்களில் சாதி நிலைநிறுத்தப்படுவது குறித்து எவிடன்ஸ் அமைப்பின் கதிர், “விளிம்புநிலை அடையாளங்களுக்கான போராட்ட அமைப்புகளிலும் சாதி இருக்கிறது என்பதுதான் யதார்த்தம். ஒரு விளிம்பு நிலை அடையாளத்தின் பின் நின்றுகொண்டு மாறி மாறி கைகாட்டாமல், சாதியின் இருப்பு இருக்கிறது என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொண்டு, அந்த புள்ளியில் இருந்து பணியைத் தொடங்க வேண்டும்” என்று கூறுகிறார்.
சாதியால் ஒடுக்கப்படும் திருநர் நபர்கள் திருநராக வாழ்வது சாதி எதிர்ப்பு செயலாகும்
தலித் சமூகங்களில் பிறந்த திருநர் நபர்கள் தங்களது இருப்பினால் இரு போராட்ட மரபுகளும் இணைந்த ஒருங்கிணைக்கப்பட்ட போராட்ட வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். கானா பாடகரான விமலா திருநங்கையாக வாழத் தொடங்கிய பின் தான் சந்தித்த சாதி ஒடுக்குமுறைகள் தன்னை அம்பேத்கரின் எழுத்துகளைத் தேட வைத்ததாகவும், அவரின் புத்தகங்கள் திருநங்கையாக அவரது அடையாளத்தை சாதி எதிர்ப்பு தளத்தில் உருவாக்கத் தூண்டியதாகவும் கூறுகிறார்.
“திருநங்கையாக வாழ்வை எதிர்கொள்ளத் தொடங்கியபோது அம்பேத்கரின் புத்தகங்கள்தான் ஊட்டம் தந்தன. திருநங்கையாக நான் சாதித்த பிறகும், பாடகராக ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட பிறகும், சாதி என்னைத் துரத்திகொண்டுதான் இருக்கிறது. சாதி ஒழிப்பு பணியில் எனது பங்கு பெரிய பங்காக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் என் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது.”
சாதியால் ஒடுக்கப்படும் குடும்பங்களில் பிறக்கும் திருநர் பிள்ளைகள், தனது சமூகங்கள் சாதி எதிர்ப்பு வழியாக உருவாக்கியிருக்கும் போராட்ட மரபை ஏற்றுக்கொண்டு, தனது திருநர் அடையாளத்துடன் அத்தனை ஒருங்கிணைத்தால் மட்டுமே தனது அடையாளத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் கூறுகிறார். “திருநராகப் பிறக்கும் எந்த ஒரு நபரும் பதின்வயதிலேயே தனது திருநர் அடையாளத்தை முன்னிட்டு ஒரு தேடலைத் தொடங்கி விடுவோம். ஆனால், சாதீய வலியுடன் வளரும் எந்த ஒரு திருநர் நபரும் அம்பேத்கரைப் பற்றிக்கொள்ளவிட்டால் தான் யார் என்பது அவர்களுக்குப் புரிய வராது. தான் யார் என்பதை உணர்வதற்கு அவர்தான் பெரிய காரணமாக இருக்க முடியும். நான் யார் என்பதை உணரும்போதுதான் என்னால் நான் எதிர்கொள்ளும் விஷயங்களை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உருவாக ஆரம்பிக்கும்.”
ஆப்பிரிக்க-அமெரிக்க பதின்பருவப் பிள்ளைகளின் நலனுக்காகப் பணியாற்றும் சமூக அறிஞர் ஷான் ஜின்ரைட், மனநல மேம்பாட்டிற்கான பணிகளில் வன்முறையை எதிர்கொள்ளும் தனிப்பட்ட நபர்கள் மட்டுமல்லாது வன்முறை நிகழும் சூழல்களையும் அவர்களது சமூகங்களையும் உள்ளடக்கிப் பணியாற்றுவதன் இன்றியமையாமையைக் குறித்து இவ்வாறு கூறுகிறார் – “வன்முறையை எதிர்கொள்ளும் இளைஞர்களின் நலனை மீட்டமைப்பதற்கான வழி, அவர்களது வாழ்வின் அர்த்தம், நோக்கம் மற்றும் சுய-உணர்தலை உறுதிசெய்யும் அவர்களது அடையாளங்களிலும் அதன்வழி அமையும் சமூகப் பிணைப்பிலும் இருக்கிறது. காயங்களில் இருந்து மீண்டு வரும் அனுபவம் கூட்டாக உணரப்படும் செயல்பாடு, அந்த செயல்பாடு நிறம், பாலின அடையாளம், பாலீர்ப்பு போன்ற பகிரப்படும் அடையாளங்களின் மூலம் கட்டமைக்கப்படுகிறது. இந்த செயல்பாடுகளில் நிறத்தின் அடிப்படையிலான ஆதிக்க அமைப்பை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு, கூட்டாக அந்த ஆதிக்க அமைப்பை எதிர்க்கும் கலாச்சாரப் போராட்ட மரபு நங்கூரமாகப் பணியாற்றுகிறது. பகிரப்படும் வாழ்வனுபவங்கள் மற்றும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பது மூலமாக, இந்த அடித்தளத்திலிருந்து செயல்படுத்தப்படும் நலப்பணிகள் சமூகப் பிணைப்பின் அடிப்படையில் கூட்டாக நலனை மீட்டெடுக்கின்றன.”
தலித் பெண்ணிய செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர் தேன்மொழி சௌந்தரராஜன் “சாதி உருவாக்கும் விளைவுகளுள் ஒன்று – சாதி தரும் சலுகைகளை அனுபவிக்கும் சமூகங்கள் அது தரும் பயன்களைப் பெற்றுக்கொள்ளும்போது, சாதியைக் கேள்வி எழுப்பும் பொறுப்பு சாதியால் ஒடுக்கப்படும் நபர்களின் மேல் விழுகிறது. சாதி அமைப்பைக் களையும் பொறுப்பின் சுமை தலித் சமூகங்களின் மேல் விழுகிறது” என்று குறிப்பிடுகிறார்.
நாடகக் கலைஞர், எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா மற்றும் தலித்-திருநங்கை பொறியாளர் மற்றும் செயற்பாட்டாளர் கிரேஸ் பானு, சாதி எதிர்ப்பு சமூக அமைப்புகள் திருநர் உரிமைக்காகப் போராட வேண்டும் எனக் குரல் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட அமைப்புகள் பணியாற்றும் சூழல்களில், இணையும் விளிம்பு நிலை அடையாளங்களின் அத்தனை நுணுக்கங்கள் மற்றும் சிக்கல்களை உள்ளடக்கி ஒருங்கிணைக்கப்பட்ட போராட்ட வழிமுறைகளை இணைந்து வடிவமைக்க வேண்டிய கடமை அனைத்து சமூக அமைப்புகளுக்கும் இருக்கிறது.
குறிப்பு: Google News Initiatives உதவியுடன் Queer Chennai chronicles மற்றும் The News Minute இணைந்து நடத்திய Inqlusive Newsroom Media Fellowship கீழ் எழுதப்பட்ட கட்டுரை.